Friday, February 14, 2014

காதல் வாரம்

இந்த வாரம் "காதல் வாரம்"

காதல் ஒரு வரம் அதை ஒரு வாரத்தில் அடைத்து வைத்து அதன் நீள அகலங்களை சுருக்கி ஒடுக்கி வைப்பதில் உடன்பாடு இல்லையென்றாலும், காதலைதமிழக தாலிபான்களாக”காடுவெட்டிகள்”காதல் வெட்டிகளாக” மாறி மரம் வெட்டி பின் மனிதம் வெட்டுவதனால், காதலுக்கு இவ்வாரத்தை ஒதுக்கி அழகு பார்க்கலாம்.......

காதலை உடல் சம்பந்தப்படுத்தி உணர்சிவசப்படுத்தி அறிவியல் உளவியல் ரீதியானவையெல்லாம் தாண்டி சமூக சீர்திருத்தத்துக்கு உறுதுணையாக மிகப்பெரிய கருவியாக பயன்படுத்த வேண்டிய கட்டாய சூழலில் தமிழ்ச்சமூகம் இருக்கிறது.

தமிழகச்சாதி இந்துக்களில் ஒரு சிறு கும்பல் காதலை எதிர்த்து போர்க்கொடி தூக்கியிருக்கிறது, இதனால் இவர்கள் எல்லாம் பெரிய சமூக காவலர்கள் இல்லை!!சுயசாதி அரிப்பை காதல்குச்சிகொண்டு சொறிபவர்கள்.

சமூக மாற்றத்தின் காரணமாக இயல்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காதல்,கலப்பு மணங்களைக் கண்டு ஆதிக்கச் சாதிகள் பதற்றமடைந்திருப்பதன் விளைவாகவே,
தமிழ்மேட்டிமைச்சமூகங்கள்/ஆதிக்கசாதிகள் எனப்படுபவை அண்மைய காலங்களில் வெளிப்படையாகச் சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிராகப் பேசத் தொடங்கியுள்ளன.சாதி கடந்த காதல் மற்றும் கலப்புத்திருமணங்களைக் கொலை உள்ளிட்ட கொடூரமான வழிமுறைகளின் மூலம் தடைசெய்யவும் முயலுகின்றன.

சமூகமாற்றத்திற்கான சமூக சக்திகளாக காதலும் கலப்புத்திருமணம் மட்டுமே இருக்க முடியும் என்பது உறுதி. காதல் திருமணங்கள் மூலம் சாதியமைப்பு சிதைவதைக் கண்டு சாதியமைப்புகள் அச்சம் கொள்ளத்தொடங்கியுள்ளன.ஏனெனில் சாதியமைப்புகள் சிதைந்து சிதறினால் இந்த சாதியமைப்புகளின் அரசியல் சிதறடிக்கப்படும் என்பதே உண்மை.

எனவே சாதி அமைப்பைப் பாதுகாப்பதற்கும் அதை மேலும் இறுக்கமானதாக மாற்றுவதற்குமான முயற்சிகளை ஆதிக்க சாதி அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன அதற்க்கான இவர்களின் குறுக்கு வழிதான் ”காதலை ஒழிப்போம்” ”காதலர்களை ஒழிப்போம்” என்பது தவிர இவர்கள்  தமிழ் கலாச்சாரத்தை காப்பதற்க்காகவோ அல்லது இவர்கள் கூறும் நொண்டிச்சாக்கான ”பெற்றோர்களின் அன்பை காயடிக்கிறது” என சப்பை கட்டு கட்டும் வாதமோ அல்ல.

காதலை புறக்கணிப்பதில் மட்டும் இந்த ”சாதியும்” ”மதமும்” ஒன்று சேர்ந்து ”ஓரினச்சேர்க்கையாளர்களாக” மாறிவிடுவதன் மர்மத்தை புரிந்து கொள்வதற்க்கு மிகப்பெரிய நியாய அநியாயங்கள் குறித்த சித்தாந்தங்கள் எதுவும் அறிந்திருக்கத்தேவையில்லை.

ஏனெனில் சாதியமைப்பையும் மத அமைப்பையும் பலவீனப்படுத்தக்கூடிய ஒன்றே ஒன்றே காதல் கலப்புத்திருமணங்கள் தானே ஒழிய வேறொன்றுமில்லை.

சாதியமைப்பிற்க்கும் இந்துமதத்திற்கும் இடையிலான உறவைச்சுட்டிக்காட்டி புளகாங்கிதம் அடையும் இஸ்லாம் மற்றும் கிறுத்தவ மதங்களைச்சார்ந்த்தோரும் கூட,இவ்வாறான காதல் கலப்புத்திருமனங்கள் மூலம் ”சமயம் சாராத அடையாளம்” முன்னெடுக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்கள்.

சாதியும் மதமும்,இந்துவும் முஸ்லீமும் ஒரே புள்ளியில் சேர்ந்து எதிர்க்கும் ஒரே பொது எதிரியாக காதல் இருப்பதில் இருந்தே நாம் இதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சாதி மற்றும் சமய பிடிமானங்களில் பெரிய அளவிற்க்கு பிடிமானமில்லாத பல பெற்றோர்களை இது போன்ற அரசியல் மற்றும் சமூக அயோக்கியர்கள் சூடேற்றி உளவியல் ரீதியான சிக்கலை உண்டுபண்ணி,காதல் எதோ நமது பாரம்பரியத்திற்க்கு எதிரானது குடும்ப மான மரியாதையை தூக்கி கடாசுவது எனச்சொல்லி சொல்லி காதலை ஏதோ ”பெற்றோர் விரோத செயலாக” மாற்றி, பெற்றோர்களையும் இவ்வாறான சாதிய மற்றும் மத பிடிமானங்களின் அடிமைகளாக மாற்றி விடுகின்றனர்.

சாதியை மறுத்து காதல் செய்யும் தம் சொந்த பிள்ளைகளையே கொலை செய்யத்தூண்டுகின்றனர் இந்த சாதிய அரசியல்வாதிகள்.

மொழி ரீதியாக தமிழ் அடையாளங்களை முன்னெடுக்கும் தமிழ் தேசியர்களும் மறைமுகமாக சாதிய களத்தில் நின்று கொண்டே,சமத்துவம் சமூக நீதியையை பற்றியும் கதைக்கிறார்கள். ஒன்றுபட்ட தமிழ் தேசியம் அமைத்த பின் சாதிய ரீதியான முரண்களை பற்றிய திட்டங்கள் தீட்டலாம் என நம்மையும் கனவுகாணச்சொல்கிறார்கள்.

பல காலமாக சாதிய மற்றும் சமூக நீதியை நிலை நாட்ட கலப்பு மற்றும் காதல் திருமணத்தை தமிழகத்தில் காலூன்றவைக்க போர்க்கொடி பிடித்த பிடித்துக்கொண்டு இருக்கும் திராவிட இயக்கங்களும் சுய மரியாதை திருமணங்களை ஒரு சடங்காகவே செய்கிறார்களே அன்றி பெரியார் கற்பனை செய்த சாதி மறுப்பு திருமணங்களாக அவை இல்லை.சாதிய கட்டமைப்பை தகர்த்து எறியாத இந்த போலி சீர்திருத்தத் திருமணங்களும்  வெறுமனே இந்து மத எதிர்ப்பாகவோ அல்லது கடவுள் மறுப்பு திருமணங்களாகவோ மாற்றம் கொண்டு எந்த சடங்கை எதிர்ப்பதற்க்காக இதை தொடங்கினார்களோ அதே சடங்காக மாறி விட்டு எந்த விதமான சலனங்களையும் இச்சமூகத்தில் ஏற்ப்படுத்தவில்லை.

இப்படி அனைத்து வழிகளிலும் சாதி கடந்த காதல் திருமணங்களுக்கு இருக்கும் எதிர்ப்பு முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்க்கு இப்பொழுது தமிழகத்தில் வளர்ந்து வருகின்ற சூழலிலும் இவை எதனைப்பற்றியும் கவலை இல்லாமல் எங்கோ இரு மனங்கள் காதல் செய்து கொண்டுதானிருக்கிறது.

இட ஒதுக்கீட்டில் மட்டும் தன்னுடைய சாதி மிகவும் பின் தங்கிய சாதியில் வரவேண்டும் என நினைக்கின்ற அனைத்து சாதிமக்களும் தனக்கு வரப்போகின்ற மருமகனோ மருமகளோ பின் தங்கிய சாதியில் இருந்தால் கொலை தான்.!!!!

கல்வியறிவும் பொருளாதார முன்னேற்றமும் ஒரு சில வழிகளில் சாதிய அமைப்பை தகர்த்து எறிந்தாலும் காதல் திருமணங்களே முழுமையாக ஒரு சாதியற்ற சமூகத்தை வழிவகுக்கும் என்பதில் சிற்தளவும் ஐயமில்லை.

நானும்  காதல் கலப்புத்திருமண செய்தவன் என்ற முறையில் இதை இன்னும் ஆணித்தரமாக சொல்ல முடியும். 

மிகவும் பின் தங்கிய ஒரு வகுப்பில் பிறந்து, அந்த சாதிக்கு கிடைத்த எந்த ஒரு சலுகைகளையும் அனுபவிக்காமல்,இந்தி படித்து,பார்ப்பான் மட்டும்தான் சமஸ்கிருதம் படிக்க முடியுமா என் வெறுப்படைந்து எனது பனிரெண்டாம் வகுப்பில் இரண்டாவது மொழியாக சமஸ்கிருதம் படித்து அதிலும் நல்ல மதிப்பெண் வாங்கி,இட ஒதுக்கீட்டீல்தான் கிடைக்கும் என்று இருந்த பொறியியல் கல்லூரிக்கான வாய்ப்பை பயன்படுத்தாமல், எனது மதிப்பெண்களுக்காக கிடைத்த ஓட்டல் நிர்வாகத்துறையில் படித்து,பின் அதன்மூலமாக வேலையும் பெற்று எனது சுய திறமையையும் நம்பிக்கையும் எனது மூலதனமாக வைத்து, சுய தொழில் செய்து,எனது  தமிழனத்திற்க்கு சற்றும் சம்பந்தமேயில்லாத ஒரு வட இந்திய இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து அவரை திருமணமும் செய்து,இன்று இரு பெண்குழந்தைகளுக்கு தகப்பனாகி இருக்குறேன்.

எனது குழந்தையை பள்ளியில் சேர்க்கும் பொழுது இந்து என சொல்லிய எனது மனைவியை முதல் முறையாக மறுதலித்து எனது குழந்தையை சமய ரீதியாகவும்,சாதி ரீதியாகவும் எவ்வித அடையாளமற்றவளாக நிறுவினேன்.மொழி ரீதியாக கூட எனது இரு குழந்தைகளுக்கும்  தமிழோ அல்லது எனது மனைவியின் மொழி அடையாளமோ இல்லாத பெயர்களை தேர்ந்தெடுத்தேன்.

நாளை எனது இரு பிள்ளைகளுக்கும் கண்டிப்பாக அவர்களது சமய,சாதி மற்றும் மொழி அடையாளமும் இருக்கக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறேன்.

அடையாளம் தான் இருக்காதே தவிர எனது முதல் குழந்தைக்கு,அனைத்து மதங்களைப்பற்றியும் தெரியும்,சிவனை,புத்தனை,அல்லாவை,இயேசுவைத்தெரியும்.

சாதியும் தெரியும் அதை தூக்கி அவளது தகப்பன் ஏன் எறிகிறான் என்பதற்கான காரணமும் தெரியும்.ஆங்கிலம்,இந்தி,தமிழ் கொஞ்சம் சீனமும் மலாயும் தெரியும்.

இதை குறிப்பிடுவதற்க்கு காரணம் மிகச்சாதாரணம். 

சாதியை தூக்கியெறிவதற்க்கோ அல்லது சமூக நீதி அடைவதற்கோ மிகப்பெரிய புரட்சியாளனாகவோ அல்லது சமூக அறிவியல் திறன் படைத்தவனாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.

மிகச்சாதாரணமான ”தர்க்க அறிவும்”,தூக்கியெறிவதற்கான ”ஒரு நொடியும்” தான் தேவை.



























No comments:

Post a Comment