Thursday, July 22, 2021

சல்பேட்டா - இடியப்பன் - கறிக்கார பாய்



சல்பேட்டா - இடியப்பன் - கறிக்கார பாய் 

பெரியாரை துவக்கப்புள்ளியாக  சிந்தையிலேந்தி, திராவிடத்தை மய்யப்புள்ளியாக கையிலேந்தி, பிறப்பாலும் சாதியாலும் மதத்தாலும் ஒடுக்கப்பட்டோர், தடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், முடக்கப்பட்டோர் ஆகியோருக்காக தமிழ் நாட்டில் தமிழர்களுக்காக,  தமிழ் மொழியினை மூச்சுக்கருவியாகக்கொண்டு செயல்பட்ட பல்வேறு இயக்கங்களின் வரலாற்றினை மறைக்கும் வண்ணம் இன்று பல புதிய போராளிகளும் போலி புரட்சியாளர்களும் பெரியாரின் இடதுசாரி தமிழ்தேசியத்தையும் சாதி மறுப்பீடையும் குறை சொல்லும் போக்கு அதிகரித்துள்ளது. 

தமிழுணர்வு, முற்போக்காளர்கள் என்கின்ற பெயரில் மீண்டும் பார்ப்பனப் புத்திக்காரர்களும், சில பல ஏஜண்ட் அரசியல் செய்பவர்களும் வரலாற்றின் மீது மாஸ்க் போட்டு மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் செயல்கள் அதிகரித்திருக்கின்றது.

வெட்டு, குத்து, ரவுடியிசம் என்பன பொதுவாக வட சென்னையின் அடையாளங்களாகச் சொல்லப்பட்டும் பேசப்பட்டும் பதிவு செய்யப்பட்டும் படமாக்கப்பட்டும் வருகின்றன. 

ஆனால், இவை எல்லாவற்றையும் விட வடசென்னையின் அடையாளங்களாக உண்மையில் இருப்பவை வேறு. 

வடசென்னை என்பது ஒரு உணர்வு. பூர்வக்குடிகளின் வாழ்வியல், நீண்ட நெடும் வரலாற்று பாரம்பரியக் கொண்ட நிலவெளி உரிமை. 

அம்மண்ணின் ரத்தமும் வியர்வையும் அழுக்கு படிந்தது போலவே கண்களுக்குத் தெரிந்தாலும் அதில் கேரம், கால் பந்து, ஜிம்னாஸ்டிக் போன்ற போட்டிகளில் சிறந்து விளங்கும் இளைஞர்கள், தேசிய அளவில் பல சாதனைகளையும் படைத்து வருகின்றனர். 

அதுபோல பாக்ஸிங்கிற்கும் அடையாளமாக இருக்கிறது வடசென்னை. 

தற்போது இந்த வரலாற்றை மையமாக வைத்துதான் பா.ரஞ்சித், நடிகர் ஆர்யாவை வைத்து, 'சார்பட்டா பரம்பரை' என்னும் படத்தை இயக்கியுள்ளார்.

பரம்பரை என்றால் எதோ ஜாதிய அர்த்தத்தில் சொல்லப்படும் ஆண்ட பரம்பரை அடிமை பரம்பரை அல்ல.

இன்று இருக்கின்ற ஸ்போர்ட்ஸ் அகடமி ஸ்போர்ட்ஸ் காலேஜ், கோச்சிங் செண்டர் என்பது போல அந்தக் காலத்தில் பரம்பரை என்று சொல்லியிருக்கிறார்கள். 

அதாவது, எப்படி ஒரு விளையாட்டு வீரருக்கு அடிப்படையில் இருந்து அவ்விளையாட்டின் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்து, அவரை ஒரு புரொஃபஷனல் வீரராக மாற்றுவோம் என்று இன்றைய அகாடமிகளும் கோச்சிங்க் செண்டர்களும் சொல்கின்றனவோ அதே போல தான் இந்த "பரம்பரை" என்று பெயர் வைத்துக்கொண்டு கோச்சிங்க் அளித்த அகடமிக்களுக்கும் இருந்திருக்கின்றது. 

ரோஷமான பல பாக்ஸர்களை உருவாக்கிய வடசென்னைக்கு 80 ஆண்டு கால வருட வரலாறு இதற்குப் பின்னால் இருக்கின்றது என்பது பலருக்கும் தெரியாது.

சார்பட்டா பரம்பரை திரைக்கதையில் தமிழகத்தின் வரலாற்றை மிகக்குறைவான குறியீடுகள் மூலம் ( 😜😜😜ப.ரஞ்சித் என்றாலே குறியீடு தானே) திராவிட முன்னேற்றக்கழகத்தினர் எப்படி வடசென்னைப் பகுதியில் கொள்கைக்காகவும் அப்பகுதி மக்களின் வளர்ச்சிக்காகவும் உறுதுணையாக நின்றார்கள் என்றும், காங்கிரஸ் கட்சி கொடியுடையவர்களை எப்படி எதிர்த்தனர், 

பின்னர் அதே திராவிட வழி வந்த திரைப்புரட்சியாளர்கள் சாராயத் தந்தைகளை உருவாக்கியது எப்படி ( அவர்கள் இன்று கல்வித்தந்தைகளாக உருவெடுத்து இருப்பது அதை விட கொடுமையான விசயம்) 

எமர்ஜென்சி போன்ற சர்வாதிகாரப்போக்கினை ஒன்றிய அரசுகள் எப்போதும் தமது கொள்கையாகவும் தன்மையாகவும் வைத்திருக்கின்றது என்பதை அறுதியிட்டு சொன்னதற்கும், 

அம்பேத்கர்-பெரியார்-கலைஞர் என்கின்ற அந்த நீண்ட  “பரம்பரை” அதாவது 
 “School of Thoughts”  குறித்தும் வெளிப்படையாக படமெடுத்து வெளியிட்டதற்காகவே ப.ரஞ்சித்திற்கு ஒரு சபாஷ் கொடுக்கலாம். 
 
“அம்பேத்காரை வைத்து பெரியாரை அடிக்கும்” குறுகிய வட்டத்துக்காரர் தான் Paranjith Pa என்கிற பார்வையை தகர்த்தெறிந்திருக்கின்றார். அவ்வகையில் ஒரு பலே!!!

கருப்பும், சிவப்பும், நீலமும் தான் என்றுமே அதிகாரத்திற்கு எதிரான நிறங்கள். 

மற்றவையெல்லாம்  "சார்பு நிலையற்ற" என்கின்ற புரட்டுவாதத்தின் இன்னொரு பாதையற்ற பொய்மை!

Tuesday, September 08, 2020

இந்தி தெரிஞ்ச தமிழண்டா!!! #PODA

இந்தி பேசத்தெரிந்த தமிழர்கள் கூட பலர் இருக்கிறார்கள் என்பதை இந்தியச் சமூகத்துக்குச் சொல்லிக்கொள்ளும் கடமையுடனும் பொறுப்புடனும் எழுதப்பட்ட ஒரு கட்டுரை!!!

அன்றைய திராவிட இயக்கங்கள் "தமிழ் " என்கின்ற ஒற்றைச்சொல் மூலமாக உணர்வு ரீதியாக தமிழர்களை ஒன்றிணைக்க 
முயன்று வென்றனர். 

ஆனால் இன்றைய திராவிட இயக்கங்கள், தங்கள் சுயநலத்திற்காக தமிழர்களின் உணர்வுகளைப் புண்ணாக்கி, 
அதை வணிகம் செய்து, தங்கள் அரசியல் வளர்ச்சிக்காகவும், குடும்ப லாபத்திற்காகவும் மட்டுமே பயன்படுத்தி மொழிவியாபாரம் செய்து வருகின்றனர். 

திராவிடத்தை பெயரில் மட்டும் வைத்து தனது தேர்தல் அரசியல் வியாபாரத்தை, இன்று  வட இந்தியத் தலைமையிடம் கொடுத்து, 

முட்டுச் சந்திற்குள் மொழியின் மொத்த வியாபாரம் செய்யும் முன்னேற்றக் கட்சிகளுக்கு இடையே,

நாமும் சின்னதாய் சில்லரை வியாபாரம் செய்யலாமே என்று வணிக அரசியல் செய்ய வந்த 
"நாங்க மட்டுமே தமிழர்கள்" போன்ற கட்சிகள் இதை "தமிழ்ச் சர்வாதிகார" நோக்கில் பயன்படுத்தத் துவங்கினர். 

தமிழர்களின் அறிவு மிகவும் விரிவானது. 
அது நல்லவைகளை தேர்ந்து அல்லவைகளை நீக்க வல்லது. 

"மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மணமுண்டு" என்று சொல்லிய அறிஞர்களைக் கொண்டது. 

'கெடல் எங்கே தமிழர் நலம் அங்கே கிளர்ச்சி செய்' என்று புரட்சிக்கு வித்திட்ட வீரமரபு கொண்டது. 

எனவே டி சேர்ட்டில் தமிழுணர்வை சேர்த்து தமிழர்களை ஒன்றிணைக்க நினைக்கும் வட இந்திய தேர்தல் நிபுணர்களின் அரைகுறை பேச்சில் ஆர்வம் கொள்ளாமல்,

நல்ல தமிழர்கள் விரும்பினால் அமைதியாக இந்தி படிக்கலாம்! இன்னும் பல மொழிகள் கற்கலாம். தவறில்லை!

*"தமிழன் என்பது தகுதி அல்ல அது அடையாளம் மட்டுமே" என்று சொல்லும் தலைவர்களைக் கொண்டது நம் தமிழ் நாடு!! அவர் சொல் கேட்போம்* 

மெல்லச் சாக, தமிழ் என்ன சமஸ்கிருதம் போல கடவுளின் மொழியா? 

இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்

இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!

இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!!!

தமிழ்த்தீ பரவும்...... 
ஆனால் எவரின் வணிகமோ வயிறையோ  வளர்க்க அல்ல, தமிழர்களின் வளம் வளர்க்க மட்டும் தான்!! 

பின் குறிப்பு:- 

வினா: அன்றைய திராவிட இயக்கங்கள் இன்றைய திராவிட இயக்கங்கள் வித்தியாசம் என்ன?

விடை: இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சி காங்கிரஸ், அப்படின்னு இன்னிக்கும் பல பேரு நெனைக்கிற மாதிரியான ஒரு முட்டாள் தனம்!!!


https://twitter.com/cupidbuddha/status/1302949610638331911?s=21

https://www.facebook.com/630095935/posts/10157565885485936/?extid=yYbXoqQLOwSWom1w


https://www.instagram.com/p/CE1fWcogjr_/?igshid=1eudzt7se8ti

பார்ப்பன எதிர்ப்பா? பார்ப்பனிய எதிர்ப்பா ?

பார்ப்பனர்களுக்கு எதிராக ஏன் இவ்வளவு வன்மம் நிறைந்த பதிவுகளும் கருத்துக்களும் தொடர்ந்து நீங்கள் பதிவு செய்துகொண்டே இருக்கிறீர்கள் என்று எனது தாம்ப்ராம் நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்???

பார்ப்பனர்களுக்கு எதிரான என்று எனது கருத்துக்களை நான் சுருக்கிக்கொள்வது என்றும் கிடையாது. 

என்னளவில் பார்ப்பனியத்திற்க்கு எதிரான கருத்துக்களே.... 

பார்ப்பனியம் என்பது தனிமனிதர் சார்ந்தது!!

பிற்ப்படுத்தப்பட்ட,மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இனங்களில் கூட பார்ப்பனிய சிந்தனை கொண்டோர் உள்ளனர் அவர்களையும் நான் அறிவேன்!!!! 

சமூகத்தில் படிநிலைகளை செங்குத்தாக வைத்து சமூக அநீதிக்கு வழிவகுத்தது பார்ப்பனீயம் மட்டுமே. ஆகவே எப்பொழுதும் அதற்க்கு எதிர்திசையில் தான் எனது பயணம் அமையும்.

தகுதி / தரம் என்ற ஒற்றைச்சொல்லுக்குள் அனைத்தையும் உள்ளடக்கி, அத்தகுதியை பிறப்பில் வைத்ததே பார்ப்பனீயம் செய்த அருஞ்சாதனை!!!

எனது பிறப்பு எனது தகுதி அடிப்படையில் அமையாதபொழுது பிறப்பிற்க்கு பின்னாலான எனது வாழ்வு ஏன் எனது பிறப்பை ஒட்டி முடிவு செய்யப்படும் என்ற அளவில் தான் எனது கேள்விகள் கேட்கப்பட தொடங்கியது......

எங்கள் வீட்டில் கழிவறையை சுத்தம் செய்துகொடுத்த மீனாட்சியக்காவின் கூலியை கொடுத்த எனது அம்மா அவர்களின் கைகளை தொட்டுவிடாமல் அந்த 5 ரூபாயை கொடுத்ததை பார்த்து ஏன் என்ற கேட்ட எனக்கு சொல்லப்பட்டது "அவுங்க கீழ் ஜாதிப்பா" 

அதே என் அம்மாவின் கைகளைப்பிடித்து சென்ற கோயில்களில் எனக்குத்தரப்பட்ட பிரசாதங்கள் எனது கைகளை நோக்கி தூக்கி வீசப்பட்டபொழுதும் எனக்கு சொல்லப்பட்டது " அவுங்க ஒசந்த ஜாதி" 

இரண்டையும் புரிந்து கொண்ட மாதிரியும் புரியாத மாதிரியும் இருந்த அந்த வயதில், "நான் ஐயராக மாறிவிடலாமா என்று என்று புரட்சியாக யோசித்து பனிரெண்டாம் வகுப்பில் இரண்டாம் மொழியாக இருந்த தமிழைத்துறந்து "சமஸ்கிருதம்" படித்தேன்.  

அப்படி சம்ஸ்கிருதம் படித்து பாஸான பிறகும் எனது பிரசாதங்கள் கோயில்களில் என்னை நோக்கி வீசத்தான் பட்டது!!!

எனது  ஜாதிய அடையாளம் தேவைப்படாத அல்லது ஜாதி மூலமாக எனக்கு கிடைக்கவிருந்த மேற்படிப்பு தேவையில்லை என்று " ஓட்டல் மேனேஜ்மெண்ட்" கல்லூரியில் சேர்ந்தேன்!! இட ஒதுக்கீடு என்று மேல் ஜாதியினர் போடும் பிச்சை எனக்கு தேவையில்லை என்று ஒரு எதிர்ப்பு, 

இடஒதுக்கீடு என்பது பிச்சையல்ல எனது உரிமை என்று புரியவே வெகு நாட்களானது. 

எனது மொழி மற்றும் சாதி அடையாளங்களை கடந்து செல்ல காதல் திருமணமே சரியானது என்று முடிவு செய்து, அதுவும் எனது மொழியைச்சாராத பெண்ணைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்று முடிவு செய்து திருமணம் செய்தேன்.

எனது இரண்டு குழந்தைகளுக்கும் ஜாதி/ மத / மொழி / இன தாக்கங்களே இல்லாத பெயர்களை வைத்தேன். 

ஆனால் அவர்களுக்கு ஜாதி/மதம்/இனம்/மொழி அனைத்தையும் சொல்லிக்கொடுத்தேன் அதை ஏன் அவர்களின் தந்தை எதிர்க்கிறான் என்பதையும் புரியவைத்தேன். 

இவையெல்லாவற்றையும் நான் எதோ ஒரு புரிதலில் செய்து கொண்டுதானிருந்தேன்....

ஆனால் மிக மெதுவாகத்தான் பெரியார் தான் எனக்கு புரியவைத்தார் மீனாட்சியக்காவை தொடாத எனது அம்மா கூட நவீன பார்ப்பன சிந்தனையாளர் தான் என்று...... 

எனவே பார்ப்பனியத்தை எதிர்ப்பது மட்டுமே எனது அரசியல்,எனது கொள்கை,எனது வாழ்வியல் முறை என்பதை இப்பொழுது உணர்ந்து கொண்டுள்ளேன். 

என்னைப்புரிந்து கொள்ள முடிந்தால் நலம் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் கூட நலமே!!!!

09/09/2017 FaceBook 

Monday, June 15, 2020

“இந்த பூமி செத்துவிட்டது”

அண்ணன் Murali Appas மிக அழகாகச் சொல்வார், இறைவன் படைப்பிலேயே அழுகிய ( Rotten Stage) நிலையில் இருக்கும் ஒரு பொருள் என்றால் அது இந்தப்பூமிப்பந்துதான்...

அதற்கு அவர் கூறும் காரணம், அழுகிய பழத்தை எடுத்துக்கொண்டால் கூட அதில் இருந்து நீர் உற்பத்தியாகும்.

உற்பத்தியான நீரில் இருந்து பேக்டீரியாக்கள், ஃபங்கஸ் முதலிய உயிரினங்கள் தோன்றும் அதுபோல உருவானவன் தான் மனிதன் எனவே உறுதியாகச் சொல்கிறேன் நாம் ஒரு அழுகிய / அழுகிக்கொண்டிருக்கும் பிரபஞ்சப் பழம் என்பார்.

இதை ஒரு உவமையாக எடுத்துக்கொண்டால் கூட நிஜம் நமது பிடரியில் அடித்து உண்மையைச் சொல்லும்.

ஓசோன் மண்டலத்தில் ஓட்டை, கடல் உள்வாங்குகிறது, பனி மழைகள் உருகுகின்றது, புவி வெப்பமயமாகிறது என்கின்ற வார்த்தைகளையெல்லாம் கடந்த 10 - 15 வருடங்களுக்குள்ளாக அனைவரும் மிக அதிகமாக கேட்டிருப்போம்....

பூமி உண்மையில் அழியப்போகிறதா......?

என்கின்ற கேள்வி கடந்த “10-12 வாரங்களில்” மிக அதிகமாகவே கேட்டுக்கொண்டிருக்கிறது.

காரணம் “கொரோனா வைரஸ் “

என்ன தான் நடக்கிறது என்கின்ற அனுமானித்தலுக்குள் சென்றால் கூட நமக்கு எளிதாக புரியும் சமாச்சரம் என்னவென்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை.....

“நாம் நடக்கும் பாதையில் யானைகள் நடப்பதில்லை, நாம் தான் யானை நடக்கும் பாதையில் நடக்கின்றோம்”

இந்த சின்ன எடுத்துக்காட்டைப் புரிந்துக்கொண்டால் காட்டை அழித்தது யாரெனப் புரியும்.

மனிதன் மிகக்கொடியவன்,

இறைவன் படைத்ததிலேயே மிக உன்னதமான உயிர் தான் தான் என்று தன்னைத்தானே உயர்த்திக்கொண்டு,

தனக்கான தேவைகளுக்காக, தனது இருப்பிடத்தை தக்க வைத்துக்கொள்வதற்காக நியாய தர்மங்களை உருவாக்கிக்கொண்டு, அதற்கு முட்டுக்கொடுக்கக்கூடிய வகையில் சட்டங்களை அமைத்துக்கொண்டு இன்று எல்லா உயிரனங்களுக்கும் பேராபத்தை உருவாக்கி வைத்திருக்கின்றான்.

இயற்கையாக உள்ள எல்லாவற்றையும் அழித்து ஒழித்து அதன் மீது தனது அகந்தையையும் (ஈகோ) அந்த அகந்தை உருவாக்கித் தந்த அறிவையும் வைத்து இயற்கையின் மீது புதிய உலகம் கட்ட முயற்சித்தான்.....

இயற்கை ஒவ்வொரு முறையும் அவனை எச்சரித்தது.....

பெரியம்மைக்களும், பெரும் பஞ்சங்களும், நில நடுக்கமும், கடல் கொந்தளிப்பும், பசியும் பட்டினியும் என பல முறை எச்சரித்தது......

இவை எல்லாவற்றிற்கும் எதிராக எதோ ஒன்றைக்கண்டு பிடித்து நொடி நேர வெற்றியடைந்ததாக காட்டிக்கொண்டான்.....

இயற்கை மனிதனை விட பிடிவாதமானது.....

இயற்கையாக அவனுக்குப் புரியாததை செயற்கையாகவும் கூட அவனுக்கு எச்சரிக்கை செய்தது.....

உலகப்போர்கள், சர்வாதிகாரிகள், அணுவைப்பிளந்த அறிவியல்வாதிகள், என அவன் வழியில் சென்றே அவனை எச்சரித்தது.

மனிதன் மகா கர்வக்காரன்.....
பல மோடிக்களையும் ஹிட்லர்களையும் டிரம்ப்புகளையும் பார்த்தவன் அல்லவா....

அவன் அசரவில்லை......

நான் அன்பானவன் என்றான், புத்தனையும் ஏசுவையும் தனது சாம்பிள்களில் ஒன்றாக காண்பித்தான்.

மறைகள் , விவிலியங்கள், கீதைகள் எழுதித்தீர்த்தான் மனிதன்.....

சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை உள்ளவர்களை பெற்றுப்போட்டான்.....

விலங்குகள் மீது ஆர்வமுள்ளவர்களை உருவாக்கினான்....

ப்ளாஸ்டிக்கை ஒழிப்போம் என்றான் ஓசோனைக்காப்போம் என்றான்....

இயற்கையை ஏமாற்றினான்....

இயற்கையும் சரிக்கு சமம் நின்று எதிர்த்தது மனிதனை.....

மனிதன் தன் முன் ஒன்றுமேயில்லை என்ற உண்மை அதற்கு தெரிந்தாலும், தன்னைப்போல அழுகிய ( Rotten ) கிரகத்தை இப்படி உயிர்வாழ் உலகமாக்கியவன் மனிதன் தானே என்கின்ற நன்றிக்கடனில் அவனுக்கு நல் புத்தி மதிகள் சொன்னது.....

மனிதன் இயற்கையைத் தாண்டியதாக உணரத்தொடங்கிய பின்பு புத்திமதிகள் அவனது ஆசன வாயிலைத் துடைக்கும் டிஷ்யூ பேப்பர்களாகின....

வெறுத்துப்போன உலகம் மீண்டும் அவன் வழியேலேயே சென்று இனி நீ இன்னொரு மனிதனுடன் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்பதையும் தாண்டி தன் மூக்கையோ வாயையோ கூட தொடக்கூடாது அப்படிச் செய்தால் நோய் தொற்றிச் சாவாய் அதற்கு பெயர் கொரோனோ வைரஸ் என்றது....

மனிதன்
எப்பொழுதும் போல்
சற்று பயந்தது போல் நடிக்கிறான்.....

ஆனால் மனிதன் மீண்டு மீண்டும் வருவான் ஏனென்றால் இயற்கைக்கே இயற்கையான மரணத்தை
உருவாக்கியவன் மனிதன்.

நம்பிக்கை என்கின்ற ஒற்றைப் பலத்தை வைத்துக்கொண்டு இவன் ஆடும் ஆட்டம் முடிவு பெறாது....

இவன் இந்த பூமியை அழிக்காமல் இவன் அழியமாட்டான் எனவே

“இந்த பூமி செத்துவிட்டது” என்று பெரிதாக ஒரு போர்ட் மாட்டிவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப்போய் விடுவான் மனிதன்..

பாவம் பூமி!!!!!


Thursday, May 07, 2020

ராதா அம்மா


மே 5, 2019  

கமல் கூட ஒரே ஒரு போட்டோ எடுக்கனும்டா தம்பி…… என்று தொலைபேசியில் என்னைக் கேட்டுக்கொண்டிருந்த அம்மாவிடம், அம்மா லூஸா நீ ? அவர் கூட எப்ப வேணாலும் போட்டோ எடுக்கலாம், ஒண்ணும் பிரச்சனை இல்லை.


 இப்போ எலெக்சன் நேரம், பாவம் அவரு ரொம்ப பிஸியா இருக்காப்ல! முடிஞ்ச உடனே எடுக்கலாம் என்று போனை கட் செய்து விட்டேன்.

மனசு கொஞ்சமா கஷ்டமா இருந்துச்சு, பாவம் இது வரைக்கும் அம்மா கேட்டு ஒண்ணுஞ்செய்யல…….. கமல் சார் கூட ஒரு போட்டோ தான கேக்குது சரி கேட்டுறுவோம்னு, மூர்த்தி அண்ணனுக்கு உடனே போன் அடிச்சேன். மூர்த்தி அண்ணே, எங்கம்மாக்கு சார் கூட ஒரு போட்டோ எடுக்கனும்! எடுக்கலாமான்னு……..?

என்ன சத்யா நீங்க…… யார் யாருக்கோ போட்டோ எடுக்க நீங்க டைம் வாங்கி கொடுக்குறீங்க, நம்ம அம்மாக்கு டைம்மா? சார் கிட்ட கேட்டுருவோம், ஒண்ணும் சொல்ல மாட்டாரு, வரச்சொல்லுங்க, காலைல சீக்கிரமா போட்டோ எடுத்துருவோம்.

சரிங்க அண்ணே, காலைல ஒரு தடவ உங்களுக்கு போன் அடிச்சுட்டு அப்புறமா வரச் சொல்றேன்.சரிங்க சத்யா என்று மூர்த்தி அண்ணே தொடர்பை துண்டித்தார்.

மீண்டும் அம்மாவுக்கு அடிச்சேன், அம்மா நாளைக்கு காலைல சார் கூட போட்டோ எடுத்துடலாம், இன்னிக்கு ஃபுல்லா திருப்பரங்குன்றத்துல பிரச்சாரத்துல இருந்ததால டயர்டா இருக்காப்ல….

அதனால காலைல சீக்கிரமா எந்துருச்சீட்டீங்கன்னா, ஒரு 7 மணி போல கெளம்புனா கரெக்டா இருக்கும் ஓட்டலுக்கு வர அப்படின்னேன்…..

யய்யா தம்பீ ஒன்னும் பிரச்சனை இல்லையே ? பாவம் நாம போயி டிஸ்டர்ப் பண்ணமாதிரி இருக்கக்கூடாதுன்னு அம்மா சொல்ல, அதுலாம் ஒண்ணும் இல்ல,

காலைல பிஸியா இருந்தா நானே சொல்லிடுறேன், எப்படியும் திரும்பி 15 மே மதுரை வருவாப்ல அப்ப கூட எடுத்துக்கலாம்.நீங்களும் அப்பாவும் ரெடியா இருங்க நான் போன் அடிக்கிறேன்.

சரிப்பா, சாப்டியா நீயி……?

சாப்டேன் சாப்டேன்…

வீட்டுக்கு ஒரு எட்டு வந்துட்டு போயிருக்கலாம்ல? அம்மா தோச சுட்டு குடுத்துருப்பேன், துணிமணி தொவச்சு போட்டுறுப்பேன்…
அம்மா லூசாம்மா நீ, இங்க ஓட்டல்ல எல்லாமே இருக்குமா, லாண்டரில துணி தொவச்சு கொடுத்துருவாய்ங்க, ரொம்ப டென்சன் எடுக்காதம்மா?

பேசாம தூங்கு, காலைல ஃப்ரெஷ்ஷா எந்திருக்கனும், போட்டோல அழகா இருக்க வேணாமான்னு சிரிச்சுகிட்டே கேட்டேன்.

 என்னத்த அழகா இருந்து…. கமல சின்னப்புள்ளைல நேர்ல பாத்தது இப்போ இத்தன வருசம் கழிச்சு பாக்கப்போறேன் அதுவே சந்தோசமா இருக்கு.


சரிம்மா தூங்கு காலைல அடிக்கிறேன் என்று போனை வைக்க, அதே நேரத்தில் காலிங் பெல் அடிக்க, ஓட்டல் ரூம் கதவைத் திறந்தால் சுகாசினியும் நண்பர் வெங்கடேசும் நின்று கொண்டிருந்தனர்.


அண்ணே டின்னருக்கு போகலாமான்னு சுகாசினி கேட்க,


ரைட்டு கெளம்புவோம்னு சொல்லிட்டே, அம்மா கிட்ட பேசிட்டு இருந்தேன்,ரொம்ப நாளா நம்ம சார் கூட போட்டோ எடுக்கனும்னு சொல்லிட்டு இருந்தாங்க அதான் நாளைக்கு வரச்சொல்லி இருக்கேன் என்றேன் சுகாசினியிடமும் வெங்கடேசிடமும்,


அப்படியா அண்ணே சூப்பர்ணே!!! காலைலயே சீக்கிரமா வந்துட்டா பிரச்சன இல்லாமா போட்டோ எடுத்துறலாம்னு சுகாசினி சொல்லுச்சு……

ஆமாம்மா, எங்கம்மா எங்கிட்ட கேட்டு நான் எதும் செஞ்சதே இல்ல…..

அம்மாக்கு நான் டாக்டர் ஆகனும், ஆனா நான் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிச்சேன்,

அம்மாக்கு நான் மதுரைல இருக்கனும், ஆனா நான் சிங்கப்பூர் போயிட்டேன்,

எனக்கு அவுங்க சொந்தத்துல ஒரு பொண்ணு பாத்து வச்சு இருந்துச்சு, அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணனும் ஆனா நான் லவ் மேரேஜ்.


இப்படி சின்ன மேட்டரோ பெரிய மேட்டரோ அது சொன்னத செஞ்சதே இல்ல…

ஆனா இப்போ கமல் சார் கிட்ட வேலை பாக்குறேன்னு சொன்னவுடனே அதுக்கு ரொம்ப சந்தோசம்…….

நான் சொல்லாமலே எனக்கு புடிச்சத இப்பத்தான் எம்மகன் செஞ்சுராக்கான்னு எங்கப்பாகிட்டயும் என்னோட தங்கச்சிகிட்டயும் சொல்லிக்கிட்டே இருக்காம்….

அவன கடேசி வரைக்கும் கமல் கூடவே இருக்கச் சொல்லுன்னு என் தங்கச்சி கிட்ட சொல்லிருக்காம்.

அவ்ளோ புடிக்குமாண்ணா உங்க அம்மாக்கு கமல் சார்னா ந்னு சுகாசினி கேட்டுச்சு,

ஆமம்மா, புடிக்கும்ன்றத தாண்டி கமல் சார் ஃபேமிலி, எங்கம்மா ஃபேமிலி எங்கயோ நெறைய காண்ட்க்ட்ல இருந்துருக்காங்க…… 

“கமலு” இந்தப் பெயர் எங்களது வீட்டில புழங்கும், எங்களுக்கு உரிமையான பெயர்.

பரமக்குடி போயிட்டா எங்க அம்மாச்சி வீட்ல அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயர்.

இந்தா உங்க சித்தி பத்மா, ஹாசினி (சுகாசினி மணிரத்தினம்) கூடத்தான் படிச்சா, அவுங்க அக்காவோட டான்ஸ் ஸ்கூல்ல டான்ஸ் கத்துக்கனும்னு தான் சகுந்தலா பெரியம்மா துடியா துடிச்சுக்கிட்டு கெடந்தா…

இப்படி பல நிகழ்வுகள் மூலமா, கமல் சார் எங்க வீட்டுப்புள்ளையாவே இருந்துருக்காரு.


ஆனா என்ன, நான் எங்க சொந்த பந்தத்துக்கூட ரொம்ப அன்னியோனியமா இல்ல, அதனால எனக்கு யாரையுமே பெருசா தெரியாது… கதையா நெறய கேட்டுறுக்கேன் அவ்ளோதான்….

இப்ப திரும்பி இந்தியா வந்தப்ப கூட எங்கம்மாக்கு கொஞ்சம் கோபம் தான், இப்படி சிங்கப்பூர விட்டுட்டு வந்துட்டானேன்னு, எவன் பேச்சயும் கேக்க மாட்டான், அவனா முடிவெடுப்பான், அவனா எல்லாத்தையும் செய்வான், அவனா தப்பு செய்வான், அவனா சரி செய்வான்.

என்னமோ இப்ப, எப்படியோ போயி, கமலஹாசன் கிட்ட  சேந்துட்டான், புத்தி கித்தி மாறிப்போயி  “கமல விட்டுட்டும் போயிடப்போறான்னு” சொல்லிகிட்டே இருக்கு….


அது தான், சரி ஒரு தடவ அம்மாவ கமல் சார் கூட போட்டோ எடுத்துக் கொடுத்துட்டேன்னா, என்னோட பெத்த கடன் முடிஞ்டும்னு சிரிச்சுகிட்டே சொன்னேன். சாப்பிட்டு முடிச்சுட்டு அப்படியே தூங்கப்போயிட்டேன்.  

மே 6, 2019 

கரெக்டா அலார்ம் மாதிரி எங்கம்மா அடிச்சுறுச்சு.

தம்பி நாங்க ரெடியாயிட்டோம்….

 நீ எப்ப சொல்றியோ அப்ப கார எடுத்துட்டு வந்துரோம்.

சரிங்கம்மா நானும் இங்க கேட்டுட்டு சொல்றேன்னு சொன்னேன்.

சரின்னு குளிச்சி முடிச்சுட்டு ரெடி ஆகி, கமல் சார் தங்கிருக்கிற ஓட்டல் போனா அங்க அதுக்குள்ள கூட்டம் கூடியிருந்துச்சு.

என்னடா இது சத்ய சோதனைன்னு யோசிச்சுட்டே இருக்குறப்ப, மூர்த்தி அண்ணே கரெக்டா வந்து, வாங்க சத்யா ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுடுவோம்னு ரெஸ்டாரண்ட்டுக்கு நடந்து போனோம்.

ஒரு 10 பேரு இருக்காங்க சார் கூட போட்டோ எடுக்குறதுக்கு, ஒவ்வொண்ணா முடிச்சு விட்டுருவோம் அப்படின்னு மூர்த்தி அண்ணே சொல்லிகிட்டு இருக்கப்பையே,

எனக்கு சரி இன்னிக்கு போட்டோ எடுக்க அம்மாவ வரச்சொல்ல வேணாம்னு தோணிடுச்சு.

10 பேரு கூட போட்டோ அப்புறம், சார் தேர்தல் பிரச்சாரத்துக்கு கெளம்பனும், நமக்கும் வேலை இருக்கு. அம்மா அப்பா வந்தா, எப்படியும் ஒரு ½ மணி நம்மால வேற எந்த வேலையும் செய்ய முடியாது அதனால இன்னிக்கு வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்.

கைகழுவிகிட்டு இருந்த மூர்த்தி அண்ணே கிட்ட போயி, அண்ணே இன்னிக்கு அம்மாவ கூப்புட வேணாம், சார் திருப்பி 15ம் தேதி மதுரை வர்றார்ல அப்ப பாத்துக்கலாம்னு சொன்னேன்…

மூர்த்தி அண்ணே சிரிச்சுகிட்டே உங்க இஷ்டம் சத்யா எப்ப வேணா கூப்பிடுங்க…. நம்ம அம்மாவன்னார்.

சரிங்க அண்ணேன்னு சொல்லிட்டு அம்மாக்கு அடிச்சேன்,

அம்மா இன்னிக்கு முடியாதும்மா. கொஞ்சம் கூட்டமா இருக்கு 15 மே திருப்பி வர்றாப்ல அப்ப பாத்துக்கலாம்னு சொன்னேன்.

சரிப்பா, சரிப்பா ஒண்ணும் பிரச்சனை இல்லைன்னு சொல்றப்பையே லைட்டா அம்மா சோகமான மாதிரி இருந்துச்சு……

சத்யா இன்னிக்காவது வீட்டுக்கு வருவியா? பிரச்சாரம் முடிஞ்சு? இல்ல இன்னிக்கும் ஓட்டலான்னு? அம்மா கேட்க,

இல்லம்மா இன்னிக்கு நைட்டு சென்னை போறேன், 7 & 8 சென்னை, 9 ம் தேதி சூலூர், அப்புறம் 15 திருப்பி திருப்பரங்குன்றம் பிரச்சாரம். 15 வேணா வீட்டுக்கு வந்துடுறேன்னேன்…

சரிப்பா, ஒடம்ப பாத்துக்க,

புள்ளைங்கள பத்திரமா பாத்துக்க,

கண்ட்த கழியத சாப்புடாத……

கோபப்படாத, முக்கியமா கெட்ட வார்த்தைய கொறச்சுக்க,

கமல் மாதிரி ஆள் கூட இருக்கப்ப கெட்ட வார்த்த பேசுறது நல்லா இருக்காது அப்புறம்……

அப்படின்னு எதோ சொல்ல ஆரம்பிக்கிறதுக்குள்ள,

யம்மாயம்மாயம்மா விடும்மா விடும்மா வேல இருக்கு அப்புறமா பேசுறேன்னு சொல்லிட்டு போன வச்சுட்டேன்.

 மே 6, 2019 பிரச்சாரம் முடிஞ்சு, நைட்டு சென்னை பயணம், 7ம் தேதி ஆபிஸ் போயிட்டு நைட்டு சீக்கிரம வந்து தூங்கிட்டேன்.  

மே 8, 2019

காலைல முரளி அப்பாஸ் அண்ணே எப்போதும் போல 6.30 மணிக்கெல்லாம் போன் அடிச்சு பேசிகிட்டு இருக்காரு, பின்னாடி எங்கப்பா இன்னொரு ”கால்” ல வர்றாரு,

அண்ணே திருப்பி அடிக்கிறேன்னு சொல்றதுக்குள்ள, என்னோட இன்னொரு நம்பருக்கு அப்பா வந்துட்டாரு,

என்னங்கப்பான்னு கேட்டேன், அம்மாக்கு திடிர்னு ஹார்ட் அட்டாக் வந்துருச்சு, அப்போலோல சேத்துருக்கோம். நீ கொஞ்சம் மதுரைக்கு வர்றியான்னு ஒரு மாதிரி ஒடஞ்சு போயி கேட்டாரு….

ஒண்ணும் புரில சரின்னு கெளம்பிட்டேன்.

ஃப்ளைட் ஏறி உக்காந்த உடனே போன், பக்கத்து வீட்டு அக்கா கிட்ட இருந்து “சத்யா சாரி அம்மா could not sustain” இறந்துட்டாங்கன்னு……

ஆஸ்பத்திரி போயி சைன் போட்டு, அம்மாவ வீட்டுக்கு எடுத்துட்டு வந்து தங்கச்சிக்கு போன் அடிச்சு, எல்லா வேலைய முடிச்சுட்டு சாயந்திரமா அப்பா பக்கத்துல உக்காந்து இருக்கப்ப

“கமல் சாரோட ஃபோன்”  என்ன சத்யமூர்த்தி அப்படின்னு….. விசயத்த சொல்லிட்டு இருக்கப்பவே,

ரெண்டு நாள் முன்னாடி தான் அம்மா ஃபோட்டோ எடுக்கனும்னு சொன்னாங்களாமே, கூட்டிட்டு வந்துருக்க வேண்டியது தானேன்னு……. கமல் சார் கேக்க…….

தெர்ல சார்,

கமல டிஸ்டர்ப் பண்ணாதடா, அவரு ஃப்ரியா இருக்கப்ப எடுப்போம்னு சொன்னாங்க சார், அப்படின்னு அழுகக்கூட தெரியாம சொல்லிட்டே இருந்தேன்……

 “என்னிக்கு இவன் என் சொல்லு பேச்சு கேட்டு இருக்கான்னு” அம்மா சிரிச்சுகிட்டே எங்கப்பா கிட்ட சொல்ற மாதிரியே ஒரு சவுண்ட் கேட்டுச்சு அசரீரியா இல்ல என்னோட குரலான்னு எனக்கே சந்தேகமா இருந்துச்சு..