அனேக உறவுகளை ஒரு நுண்ணுர்வோடு நோக்கும் போது ஏமாற்றமே மிஞ்சுகிற்து.
நாம் சந்தித்த, கவனித்த, வாசித்த அனைத்து மனிதர்களிடமும் எதோவொரு அரசியல் இருப்பதை பார்த்த பிறகுதான் ஒரு விட்டேத்தியான மனோநிலையும்,அதுவே சில சமயம் அடங்கா கோபமாக வடிவெடுக்கிறது.
மனிதாபிமானமும் நட்பும்கூட ஏதோவொரு அரசியலின் மீதே கட்டமைக்கப்படுகிறது . அனைத்தும் உதறிய ஒரு சூனிய நிலை நட்பும் மனித உறவும் வாய்ப்பதேயில்லை.
எதிர்பார்ப்பே இல்லாத உறவுகள் என்று உணரப்படும் சில நெருக்கமான உறவுகளில் கூட "புரிதல்"' எனும் எதிர்பார்ப்பு, உறவின் ஏதோ ஒரு மூலையில் ஒட்டி கொண்டு தான் இருக்கிறது. குறைந்தபட்ச புரிதலுக்கான ஏக்கம் கூட எல்லா சமுக மனிதனின் எதிர்ப்பார்பாகவே உள்ளது..
மனிதாபிமானமும், நட்பும் கண்டிப்பாக அரசியலின் மீது தான் கட்டமைக்கப்டுகிறது என்பதில் எனக்கு சற்று உடன்பாடு இல்லை என்றாலும் அதை நூற்றுக்கு நூறு மறுப்பதற்கும் இல்லை
அநேகமானவைகள் அவ்வாறு இருக்கலாம் ஆனால் குறைந்த சதவிகிதத்திலும் எங்கேனும் சில நட்பும் மனிதாபிமான உணர்வுகளும் இவைகளுக்கு அப்பார்ப்பட்டவைகளாகத்தான் இருக்கின்றன என்பதிலும் எனக்கு உடன்பாடு உண்டு.
சில உறவுகளின் மெல்லிய நுணுக்கமான அன்பில்,
எதிர்பார்ப்பில்லாத பரிமாற்றங்களில்,
ஆழ்ந்த மௌனம் சார்ந்த பரிபாஷைகளில் நம்பிக்கை துளிர்த்துக்கொண்டே இருக்கிறது.
இந்த நம்பிக்கையில் எனக்கு எப்பொழுதும் ஒரு ஆறுதல்,
சில சமயம் அந்த மாதிரியான மனித உறவுகளுக்கு நாம் தகுதியானவர் கிடையாதோ என்ற ஐயம்கூட மனதை உலுக்குபவைதான்.
அமைதியாக ஆழமாக,சிந்தித்துணரும் பொழுது, நம்மை நாமே சுயவிமர்சனம் செய்யும் பொழுது,உறவுகள் மீதான தகுதியை பற்றி சில முடிவுகளை ஏற்க நமது மனமே தயாராய் இல்லை. ஏனெனில் சில அளவுகோல்களை புற உறவுகளுக்கும் சுய உறவிற்கும் பொருத்தி பார்க்கும் போதுதான் சிக்கல்.
இங்கு பெரும்பான்யானவை மேலோட்டமான உறவுகள்தான், "சுய உறவு" கூட மேலோட்டமானது என்பது தெரிய வரும்பொழுது நம்மை பற்றி நாம் கொண்டிருந்த மதீப்பீடுகள் சிதைந்து போகின்றது.
நமக்கு நாமே ஒரு ஆழமான உறவு கொள்ள முடியாத பொழுது தான் புற உறவுகள் மீதும் ஒரு விதமான மேலோட்டமான உறவு மலர்ந்திட காரணமாகி விடுகிறது.
நம் மீதான நம்மின் உறவு,சுய லாபம் மற்றும் சுய நலத்தோடு இருக்கிறது அதையே நாம் புற உறவுகளிலும் எதிர்பார்க்கிறோம்.
புற உலகின் திணிப்புகள் மத்தியில் வாழ்ந்துவிட்ட நமக்கு, நமக்குள்ளான உறவு சாத்தியபடுவதேயில்லை. அந்த உறவுக்காய் முயலும் போது குற்ற உணர்ச்சிதான் மிஞ்சுகிறது. பிண்டம் அண்டம் அனைத்துமே புரியாத உறவுகளுக்குள் சிதைந்து கிடக்கிறது.. அதீத எச்சரிக்கையுணர்வு வாழ்வை சிதைப்பவையாகவே உள்ளது.
நம் மீதான நமது உறவு ஆழமாக தீர்க்கமாக உண்மையை நோக்கியதாக இருக்குமேயானால் அண்டத்தில் இருப்பது தான் பிண்டத்தில் இருக்கிறது என்ற பேருண்மை புலப்படும்.
என்னால் என்ன செய்ய முடியுமோ
அதை செய்ய எத்தனிக்கும் வேளையில்,
அதை செய்ய முடியாமல்
சில காரணிகள்......
அவற்றில்மிக
கவனமாக தவிர்த்து வருகிறேன்
எப்போதும் அடையாளமாய்
எனது பெயரை!!!!!!!
Very well written
ReplyDelete